Welcome

Posted: நவம்பர் 18, 2008 by Gokul Amarnath in Welcome Note
குறிச்சொற்கள்:

Welcome to “என் ஜன்னலுக்கு வெளியே“. There is no big reason behind its origination. Among friends we talk anything including crazy stuff whenever time permits. We will definitely find something interesting in each of our views and want to elaborate/share through a common medium across all geographies. And indeed we treaded here.

Check out our scraps and leave your footprint. Have fun.

 

Cheers,

Gokul

Admin.

 

வண‌க்கம்,

 

இலக்கினை  தீர்மானித்து, அதை நோக்கி பாயும் அம்பினை போல் இந்த முயற்சி ஆரம்பமாகிறது. பென்சிலினை கண்டறிந்த ஃபராங்களின் போல் அல்ல. சந்திராயன் அனுப்பி வெற்றி கண்ட குழுவை போல் இந்த பயணம் ஆரம்பமாகிறது. கண்டதையும் சொல்வோம். நீங்கள் காணாததையும் சொல்வோம். உள்ளது உள்ளபடி, மனத்தில் பட்ட,கண்ணில் கண்ட காட்சிகள் இங்கே காண கிடைக்கும். இது கண்ணி முயற்சி மட்டும் அல்ல. கனவும் கூட.

அன்புடன்,
அரங்கப்பெருமாள்
ஆசிரிய‌ர்.

 

 

 

 

 

 

 

அன்பு மகனுக்கு…..

Posted: ஜனவரி 8, 2012 by Gokul Amarnath in Uncategorized

என் செல்வமே,  உன் தந்தையாகிய நான் உனக்கு வரையும் முதல் அன்பு மடல். நீ இந்த உலகுக்கு அறிமுகமாகி பதினொரு மாதங்களே ஆன தருணத்தில் உனக்கு கடிதம் எழுதுவது சற்று வேடிக்கையாக‌ தோன்றும் . இப்பொது நான் சொல்வதை படிக்கவோ புரிந்து கொள்ளவோ உன்னால் முடியாது. உனக்கு புரியும் மழலை மொழியில் எழுத எனக்கு தெரியாது. ஆனால் ஓரு நாள் நீ இதை விரும்பி படிப்பாய் என்றே நினைக்கிறேன்.

இந்த‌ க‌டித‌ம் எழுதுவத‌ற்க்கு வேறு ஓரு காரணம் இருக்குமானால் அது  உன்னுடன் கொஞ்சி விளையாட முடியாத நிலையை எண்ணி வருந்தும் மனதுக்கு ஆறுதல் சொல்ல நினைக்கும் முயற்ச்சியகவே இருக்கும்.

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.”

என்று குழந்தைகள் பேசும் மொழியைக் கேட்பதே மிகப்பெரிய மகிழ்ச்சி என்கிறார் வ‌ள்ளுவர். இந்த பாக்கியதை உன்னை பெற்றதால் பெற்றவன் நான். என் வாழ்வின் மிக மகிழ்வான தருணம் என்ன என்று கேட்டால் அது நான் உன்னை முதன்முதலில் கையில் ஏந்திய நொடியாகதான் இருக்கும். உன் பிஞ்சு கை கால்களின் மென்மையில் நான் மெய் மறந்தே  போனேன்.

என் செல்ல குட்டியே, இந்த கடித‌த்தில் என் வாழ்க்கை அனுபவத்தில்
நான் தெரிந்து கொண்டதை,  புரிந்து கொண்டதை ஆராய்ந்து
உனக்கு சொல்ல விரும்புகிறேன். இதில் உனக்கு பயன் உள்ளதை மட்டும் எடுத்து கொள்.

எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. இது என் அம்மா எனக்கு சொன்னார்கள்.

அம்மாவின் சமயலை பாராட்டு. அதை விட சுவையான உணவு உலகத்தில் இல்லை. எப்பொதும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்.

இதயதின் வழி நட. உன் உள் மனதுடன் பேசி பழகு. அது சொல்வதை கவனி. அறிவு தடுமாறும் போது அது உன்னை வழி நடத்தும்.

உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். மற்றவர்கள் உன்னை நண்பனாக தேர்வு செய்வதை விட நீ உன் நண்பர்களை தேர்ந்து எடு. உன் வாழ்க்கை நேராகும்.

வாழ்க்கை விலைமதிப்பில்லாதது. அதே சமயம் நிர‌ந்தறமற்றதும் கூட. அதனால் ஓவ்வொரு நாளும் நமக்கு கிடைத்த வரம் ஆக‌ எண்ணி வாழ வேண்டும்.  இதை ஆங்கிலத்தில் அழகாக இப்படி சொல்வார்கள் – ‘Everyday is a gift, that is why it is called present’.  உன்னை கடந்து செல்லும் ஒவ்வொறு வினாடியும் கவனி. மாதத்தில் என்றாவது ஓரு நாள் அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்த்து ரசி. அதன் ஓளிக்கதிர்களை மனதிலும் உடலிலும் உள்வாங்கி சேமித்து கொள். வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் சிறிய இடுக்கிலிருந்து சின்னஞ் சிறிய தளிர் உணவுக்காக தன் தலையை வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை உன்னால் பார்க்க முடியும். ஓவ்வொறு உயிரினத்தின் போராட்டமும் ஆரம்பமும் இதுவே.

தினமும் சிறிது நேரம்  நாளிதழ் படிப்பதிற்க்கு ஓதுக்கி கொள். உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உன்னால் அறிந்து கொள்ள அது உதவும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து சிறிது உன்னை விலக்கி கொள். இயற்க்கையை நேசி. அது மனதுக்கும் உடல‌க்கும் உற்சாகம் அளிக்கும். நல்லதும் கூட.

பள்ளி பாடத்துடன் மட்டும் நிறுத்தி விடதே. உனக்கு பிடித்தை படி. புத்தகங்களை நேசி. வார்த்தைகள் பல விசித்திர உலகங்களுக்கு உன்னை அழைத்துச் செல்லும். ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். ”கண்டதை திண்பவன் குண்டன் ஆவான்; கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான்” என்று என் தந்தை வேடிக்கையாக‌ சொல்வதுண்டு.

கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். அனுபவமே சிறந்த ஆசான். அனுபவமே சிறந்த பாடம். நாம் வாழ்வில் ஓவ்வொறு நாளும் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.  கற்றலின் மேல் தாகம்  கொள். உனக்கு விருப்பமான துறையை தேர்ந்து எடுத்து அதற்கு தேவையான அறிவை வளர்த்துக் கொள்.

கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையல்ல. பேராசை கொள்ளாதே. எந்த நிலையிலும் கடமையை செய்ய மறக்காதே. இதுவே உன்னை நீ ‘self content’ ஆக உணர உதுவும்.

இந்த உல‌கம் பெரியது. அது சொல்லி கொடுக்கும் பாடங்கள் எராளம். தோல்விகள்தான் ஓரு மனிதனுக்கு நிதானத்தை கற்று கொடுக்கிறது. தொல்லை இல்லா வாழ்க்கை சுவைக்காது. துன்பமும் இன்பமும் நிலைக்காது. கண்ணதாசனின் எழுமையான வரிகள் இதே அழகாக‌ சொல்லும் -
“நடப்பதை எண்ணி வருத்தப் பட்டால் அவன் மூடன்; போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்”

அதனால் எந்த இக்கட்டான சூல்நிலையையும்  தைரியித்துடன் சந்தித்தால் வெற்றி உனதே. துணிவே துணை என்று கொள். என் அப்பா எனக்கு சொல்லிய மந்திர சொல்லும் இதுதான்.

நானும் உன் அம்மாவும் என்றும் உனக்கு நல்ல வழிகாட்டியாக  இருப்போம்.

அன்பு முத்தங்களுடன்,
உன் அப்பா



எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்

ஓன்றாய் இணைந்தோம் அன்பால் கலந்தோம்

நம் மண‌ம் முன் ஜன்மத்துப் பந்தம் 

என்றே உவகை கொண்டேன்!

என் வாழ்க்கையில் வானவில்லாக 

தோன்றி மறைந்தாய்

என்னை விட்டு நீ நீங்கிய தருணங்கள்

உன் நினைவுகள் எனக்கு சொந்தம்

உறக்கதிலும் விழித்து கிடக்கும்

உன் ஞாபகங்கள் எனை விளிப்பில் இருத்தும்

காலம் உனக்கு உண்மையை உணர்த்தும் நேரம்

மாய வலைகள் விலகி தெளிவு கொள்வாய்

இதயத்தின் ஓரத்தில் ஓளிந்திருக்கும் 

மென்மையான‌ நினைவுகள் - உணர்வுகளால் உந்தப்பட்டு

இருவரையும் திரும்பி பார்க்கச் சொல்லும்

அது - நமக்குள் பிரிவு  என்றும் இல்லை 

நம் உறவை பலப்படுதும் உண்மையான நேசம் என உணர்த்தும்...

 

“கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை;

கொஞ்சம் முழிப்பு, கொஞ்சம் தூக்க‌ம்;

கொஞ்ச‌ல் சத்த‌ம் இதமாய் கேட்கும்;

கெஞ்சும் அழுகை ப‌சிக்கு ம‌ட்டும்;

பிஞ்சு கால்கள் எட்டி உதைக்கும்,

என் நெஞ்ச‌ச் சுமைக‌ள் ப‌ஞ்சாய் ப‌ற‌க்கும்;

ப‌வ‌ள‌ இதழ்க‌ளின் புன்ன‌கை போதும்

எண்ண‌ங்க‌ள் யாவும் ச‌ரித்திர‌ம் ப‌டைக்கும்;”

 

சரிகாஷாக் கொலைக்குப் பிறகு,”ஈவ்-டீஸிங்” எதிராக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப் பட்டது. சட்டம் போட்டு விடுவதினாலே குற்றம் குறைந்து விடுவதில்லை.சமீபத்தில் ஆந்திராவில் ஆஸிட் ஊற்றப்பட்டிருக்கிறார் இருபத்திரண்டு வயதேயான, பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஸ்வப்னிகா. எத்தனை வக்கிரம், எப்படி ஒரு சிந்தனை, எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.தன்னை காதலிக்க மறுத்ததால், இப்படி ஒரு செயலில் இறங்கியுள்ளனர் அந்த கேவலமான மிருகங்கள்.அவ்ர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது ஆறுதலான செய்தி என்றாலும்,இது போன்ற குற்றம் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெண்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பழகுவது, உடை அணிவது நல்லது.இது  இன்றைய சூழலில் சில தவறுகளைத் தவிர்க்கும். அதேசமயம் பெண்கள் இன்ன ஆடைகளைத்தான் அணியவேண்டும் என்று வெளியிலிருந்து யாரும் வற்புறுத்தவும் முடியாது! அப்படியே, தெரிந்தோ தெரியாமலோ தூண்டுதல் நடந்திருந்தாலும் பெண்களின் சம்மதமின்றி அவர்களைக் காயப்படுத்தவோ, கட்டாயப்படுத்தவோ ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

உண்மையை சிந்தித்துப் பார்த்தால், மனிதன் இன்னும் வளரவில்லை என்ற எண்ணமே தோன்றுகிறது.ஆணாதிக்க சமுதாயம் இன்னும் மறையவில்லையோ என எண்ணவும் தோன்றுகிறது.காவியங்களில் இதற்கான உதாரணம் கொட்டிக் கிடந்தாலும்,இன்றைய தொலைக்காட்சி தொடர்களும் மக்கள் மனதை குட்டிச் சுவராக மாற்றுவதிலே பணம் பணம் பண்ணுகின்றன என்பதும் ஒரு கேவலம். இவையெல்லாம் ஒரு நாளிலே மாறும் என்றால் நன்றாக இருக்கும் என்றாலும் அது சாத்தியமில்லை.ஒழுக்கம் பள்ளிகளிலே ஆரம்பமாக வேண்டும்.ஆசிரியர்களின் பங்களிப்பு மிக அதிகமாத் தேவைப்படுகிறது.அந்த பிஞ்சு நெஞ்சிலே அந்த ஒழுக்கம் விதைக்கப்பட வேண்டும்.அதே நேரத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களே என்பதையும் மறக்கக் கூடாது.

எந்த ஒரு குற்றமும் ஒழிய வேண்டுமானால்,அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று குற்றம் செய்பவர்கள் திருந்தவேண்டும், இரண்டு இப்படி குற்றம் செய்தால் மிகக் கடுமையான தண்டனையின் மூலம் தடுக்கவேண்டும்.குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ,அரசின் மீதோ, காவல் துறையின் மீதோ, நீதி மன்றங்கள் மீதோ பயமும் மரியாதையும் நிச்சயம் வேண்டும். தவறு செய்தால் தண்டிக்கப் படுவோம் என்ற எண்ணம் நம் இரத்ததில் இருக்க வேண்டும்.இது போன்ற செய்திகள்,மக்களுக்கு பழகி விட்டது என்ற நிலைமையே ஆபத்துதான் என்பதை நாம் உணர வேண்டும்.

தன்னைத்தானே மதிக்கிறவர்கள் குறைந்துபோகிற சமுதாயம், அடுத்தவர்களின் உணர்வுகளை மதிப்பதற்கும் மறந்து போகும்.மற்ற நபர்களைப் புரிந்துகொள்வதும் அவர்களை மதிப்பதும்தான் நாம் கற்று கொள்ள வேண்டிய முதல் பாடம்.

- அரங்கப்பெருமாள்

‘அரிதரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும்நயத்தலரிது’

- இது,’அரியது எது? என்ற முருகனின் கேள்விக்கு ஔவையின் பதில். தகடூரை ஆண்ட அதியமான் ஔவைக்கு நெல்லிகனி கொடுத்தது,ஆத்திசூடி இவற்றின் மூலம் நமக்கு அறிமுகமானவர் இவர்.

ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர் என்றும்,பெண்பாற் புலவர்களை இந்த பெயரில் அழைததனர் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளன. மிக எளிமையாகவும்,சுருங்கவும் சொல்லுவதில் வல்லவர். வள்ளுவர் எழுதிய குறளை விடவும் சுருங்க சொன்னவர்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
இதை  “எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்று சுருக்கினார்.

ஔவையார் சிறுமியாய் இருக்கும்பொழுது ஒரு புலவர் அவரது தந்தையாரைக் காண வருவார். அவர் எழுதிய கவிதை ஒன்று,

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா -

என்று பாதியில் நின்றுவிட்டதென்று சொல்ல அப்போது அங்கு வந்த சிறுமி ஔவை

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

என்று மீதிப்பாடலைக் கூறினார்.

பொருள் : நாம் ஒருவருக்கு உதவி செய்கையில் அதன் கைம்மாறான பலன் நமக்கு என்று கிடைக்கும் என்று எண்ணிச் செய்யக்கூடாது. தென்னை மரம் அதன் வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, இளநீராகவும் தேங்காய்களாகவும் தன் தலையில் உருவாக்கி நமக்குத் தருவது போல் நாம் பிறர்க்குக் கைம்மாறு கருதாமல் உதவினால் நமக்கு உதவி தேவைப்படுகையில் அது தானாகவே கிடைக்கும்.

ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்தபொழுது ,ஆணாதிக்கம் மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும் ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டீ என) விமர்சிக்க,

“ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ”

என்று கூற ஔவையார் கோபங்கொண்டு

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது

என்று பதில் வந்தது ஔவையிடமிருந்து.

எட்டு (8) என்ற எண்ணுக்குத் தமிழில் “அ”, கால் (1/4) என்ற எண்ணுக்கு “வ”, அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் “அவலட்சணமே” என்றாகிறது.  எமன்ஏறும் பரி என்றால் எருமை.பெரியம்மை என்றால் மஹாலக்ஷ்மியின் அக்காளான மூதேவி. கூரையில்லா வீடென்றால் குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் அனுமன் ஒரு குரங்கு. கம்பர் ராமாயணத்தை எழுதியதால் அவர் ஒரு வகையில் ரராமனின் தூதுவனாகிறார். நீ சொன்னது ஆரைக்கீரை எனும் பொருள்பட அடீ என்று சொன்னதற்கு பதிலுரையாக “அடா”வைச் சேர்த்து ஆரையடா என்றார்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
- இவை நாம் சிறுவயதில் படித்தவை.கொன்றை வேந்தன் என்னும் நூலில் உள்ள பாடல்கள் இவை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”
- இடு மூதுரையில் உள்ள பாடல்.
பெரும்பாலான பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை என்பது இவரது சிறப்பு.

- அரங்கப்பெருமாள்

இமைக்க மறந்தேன்…

Posted: நவம்பர் 25, 2008 by சகா. சதீஷ் in கவிதை
குறிச்சொற்கள்:, ,

kansimittaneram

அது
என்னவோ தெரியவில்லை;
உன்னை பார்க்கும்போதுமட்டும்
என்
இமைகள் இரண்டும்
திறந்த நிலையிலேயே
இறந்து விடுகின்றன….

- சகா. சதீஷ்

இலையுதிர் காலம்…

Posted: நவம்பர் 24, 2008 by சகா. சதீஷ் in கவிதை
குறிச்சொற்கள்:, ,

ilayuthirkalam1

நத்தைபோல் இரவு
மெத்தை மேல் நானோ
விடியாத இரவோடு
விரோதம் கொண்டு,
விடியலை நோக்கி
விரதம் பூண்டிருந்தேன்…

எண்ணக்குவியல்கள் என்னை
தின்று தீர்த்த வேளை
விரதம் ஏற்று, சற்றெ
கருணை காட்டினான் கதிரவன்

அப்பாடா! இத்தனை நாள்
கட்டில் போராட்டத்திற்கு
இன்றுதான் விடுதலையோ!
என்னில் ஏதோ விறுவிறுப்பு,
பரபரப்பு மாறாக சுறுசுறுப்பு!

புறப்பட்டேன்! புறப்பட்டேன்! – என்
ஆசைக் கனவுகளின் அர்த்தம்
தெரிய புறப்பட்டேன்!
பேருந்திற்கும் கூட என் வேகம்
புரியவில்லை போலும், மிகுந்த
போராட்டத்திற்கு பிறகே, கண்ணில்
புலப்பட்டது கல்லூரி!

காத்திருந்தேன்! காத்திருந்தேன்! – என்னில்
வசந்தத்தை ஏற்படுத்தும் அவள்
வருகைக்காக காத்திருந்தேன்…
மல்லிகை தன் குணத்தை காட்ட
மங்கை அவளும் வந்தாள்.,
புதிர் புன்னகை பூசி,
வாடிக்கை பார்வை வீசி
நகர்ந்து சென்றாள்!

அவளின் விழிகள் பேசும் மொழி
அன்னிய மொழியோ, யாரும்
அறியாத மொழியோ – ஆனால்
ஒன்று மட்டும் உண்மை;
அந்தக் கண்களின் மொழியால்
கலைந்த இரவுகள்
எத்தனை எத்தனையோ!

காத்திருப்பு இன்னும் என்னை
கலவரப்படுத்த,
அவளருகே சென்றேன்;
நித்திரை துறந்து, முன் இரவு
நான் திரித்த
காதல் பரிமாற்றக் கடிதத்தை
அவள் முன் நீட்டும் முன்,
முந்திக்கொண்டாள்
அதீத அவசரக்காரியாய்…

ஆயிரம் ஆயிரம் அதிர்வுகளை என்னில்
ஏற்படுத்திவிட்டு ஏதும் அறியாதவளாய்,
மஞ்சள் மணஓலை ஒன்றை நீட்டி – அவள்
கூறிய வார்த்தைகள் என்னுள்
கூரிய வார்த்தைகள்,
“அவசியம் வரவும்…”

சிலநிமிட மெளனங்களை
பழக்கத்திற்கு பரிசளித்துவிட்டு,
சடலமாய் எனை மாற்றி
சலனமின்றி கடந்து சென்றாள்… 

கருவாய் சேர்த்த என் கனவுகள்
ஒரே வார்த்தையில் சிதைந்துபோக…
அந்த மானின் விழிகள்
என்னில் வேலை பாய்ச்சிவிட…
தாளாத என் கண்கள் தன்
தாகம் தீர்த்துவிட…
சிலகணம் நானும்
உறைந்துதான் போனேன்.

விட்டில் பூச்சியாய் இதயம்
விளக்கிலே ஏறி மெல்ல மெல்ல
எரிந்து கொணடிருக்க..
நத்தைபோல் இரவு
மெத்தை மேல் நானோ
விடியாத இரவோடு
விரோதம் கொண்டு
மீண்டும் ஓர் நல்-
விடியல் நோக்கி
விரதம் பூண்டேன்…

 - சகா. சதீஷ்

மரம் தேடும் மழைத்துளி

Posted: நவம்பர் 23, 2008 by Arangaperumal in கவிதை
குறிச்சொற்கள்:, ,

raintreeஅமைதியாத்தான் போய்க்கொன்டிருந்தது வாழ்க்கை.கட்டுப்பாடற்ற நதியாய்,வேலியற்ற காற்றாய்.எதற்கும் கலங்கியதுமில்லை.கவலைப்பட நேரமும் இருந்ததில்லை.நேரத்துடன் உறங்கியதுமில்லை.பொழுதுடன் எழுந்ததுமில்லை.இப்படியா வாழ்கிறேன் என எண்ணியதுமில்லை. இவையெல்லாம் உன்னை காணூம் வரை.

இதுவரை தென்றலை நான் இப்படி ரசித்ததில்லை.காத்திருக்கும் நேரம் அதிகமானது ஆனாலும் சுகமானது.நீ வரும்வரை உன் நினைவுகள் என் துணை,வந்தபின்… எதுவும் எனக்கு நினைவில்லை.அதுவரை மெதுவாக போய்க் கொண்டிருந்த நேரம் உன்னுடன் இருக்கையில் அத்தனை வேகமாக நகரும்.வாழ்க்கையின் இன்பம் இதுவென எண்ணியிருந்தேன்.தூக்கம் மறந்தேன்,பசி மறந்தேன்.வாழ்த்து அட்டைக்கென கடைகடையாய் ஏறி இறங்கினேன்.உனக்கென பல கவிதை படித்தேன். எந்த கவிதையும் பிடிக்கவில்லை உன் பெயரைத் தவிர.உனக்கு மட்டும் எப்படி கவிதையாய் ஒரு பெயரென வியந்ததுண்டு. 

மாற்றத்தை உணர்ந்தவர்கள் நண்பர்கள் என்பதால் கலவரப்படவில்லை.நம் காதலுக்கு தூபம் போட்ட நண்பர்கள்,உரமிட்டு,நீருற்றினார்கள்.என் தங்கையும் உணர்ந்தாள்,பிறகு அவளே எனக்கு தோழியுமானாள்.வீட்டிற்கு செய்தி கசியாமல் இருக்க,அவளையும் கவனிக்க வேண்டியிருந்தது.அப்படியும் செய்தி கசிய பெற்றோரை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது.அவர்கள் என்னை உணந்ததால்,உன்னையும் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் 

உன் வீட்டிலோ உன்னை உணராததால்,என்னையும் உணரவில்லை,நம் காதலையும் உணரவில்லை.அணையிட்டு தடுத்தார்கள்,அன்பிலே நஞ்சிட்டார்கள்.உண்மை காதல் தோற்காது என்பார்கள்.உன்னால் அவர்களை தோற்கடிக்க இயலாமல்,நீ தோல்வி கண்டாய் நானோ துவண்டு விட்டேன்.இழப்பதற்கு மட்டுமல்ல,மறப்பதற்கும் தயாரானாய்.என்னிடம் துறப்பதற்கும்,இழப்பதற்கும் ஏதுமில்லை.இழந்து விட்டேன் என்னை,தந்து விட்டேன் உன்னிடம். 

அது ஏனோ தெரியவில்லை,இப்போதும் உன் பெயர் எனக்கு கவிதையாய் தெரிகிறது.

- அரங்கப்பெருமாள்

காதலிக்கு…

Posted: நவம்பர் 20, 2008 by Arangaperumal in இலக்கியம், கவிதை
குறிச்சொற்கள்:, ,

loverகாத்திருப்பதை அறிந்து களிப்புரவில்லை

கசிந்துருக மனமிருந்தும் காலம்

கனியவில்லை

காத்திருப்பதும் எதிர்பார்த்துருப்பதும்

சுகமானதுதான்

விளைவுகள் சாதகமாகுமென்றால்.

ஒவ்வொரு விடியலிலும் சாதிப்பதைப் பற்றி

ஆயிரம் கனவுகள்

ஒவ்வொரு இரவிலும் சலிப்பான நினைவுகள்

மட்டுமே நிச்சயம்.

நொறுங்கிய நினைவுகள் நெருங்கி வரும்போது

தடுத்தாட் கொள்வது உன்

நினைவுகள் மட்டுமே

உணர்வுகளால் தாக்குன்டதால் வார்த்தைகளுக்கு 

இங்கு பஞ்சம்

இதை உணர வேண்டும் உனது நெஞ்சம்.

- அரங்கப்பெருமாள்

varanam20aayiram

படம்: வாரணம் ஆயிரம்
நடிப்பு: சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா, சிம்ரன்
இயக்கம்: கெளதம் மேனன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

கெளதம் மேனன், சூர்யா , ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் காக்க காக்கவின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மற்றுமொறு படைப்பு வாரணம் ஆயிரம். ஏக எதிர்பார்புகளுடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களை படம் முழுமையாக திருப்தி படுதுகிறதா என்றால், கண்டிப்பாக இல்லை. ஆனால் சின்ன சின்ன சுவாரஸ்யங்களையும் சில ஆச்சர்யங்களையும் கொடுக்க தவறவில்லை.

கதாபாத்திரம் உருவாக்கத்திலும் அதை கையாண்ட விதத்திலும் கெளதம் மேனன் மிளிர்கிறார். ஆனால் கெளதம் மேனனின் முந்தய படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த படத்தில் அழுத்தமான கதையோ தெளிவான திரைக்கதையோ இல்லாதது இப்படத்தின் பெரிய பின்னடைவு.  மூன்று மணி நேர படத்தில், முற்பகுதியில் இருந்த உற்சாகம், ஈர்ப்பு பிற்பாதியில் இல்லாதது பார்பவர்களுக்கு சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.

கிருஷ்ணன், சூர்யா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் தந்தை மகனாக வருகிறார் சூர்யா. வாரணம் ஆயிரம் என்ற படத்தின் தலைப்புக்கேற்ப படத்தை முழு பலத்துடன் தாங்குவது சூர்யா மட்டுமே. நேருக்கு நேர் தொடங்கி அவர் ஏற்றுவந்த கதாபாத்திரங்களின் பரிணாம உச்சம் என்று இந்த படத்தை குறிப்பிடலாம். இந்த படத்திற்காக சூர்யாவின் உழைப்பு, அவரின் ஒவ்வொரு முக பாவங்களில் இருந்து உடல் பாகங்கள் வரை நன்றாக தெரிகிறது. கண்டிப்பாக சூர்யாவின் கலை பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்.

சமீரா ரெட்டி,  மேக்னா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இடைவேளை வரை மட்டுமே வந்தாலும் படத்தின் இறுதிவரை இறுந்திருக்கலாமோ என்று  தோன்ற வைக்கிறார்.  ப்ரியாவாக வரும் திவ்யா படத்தில் இடைச்சொறுகல் போல் வந்தாலும் அலட்டல் இல்லாத நடிப்பால் கவர்கிறார். சூர்யாவின் அம்மாவாக பொருந்துகிற சிம்ரன் ஏனோ ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் பொருந்தவில்லை.

படத்தின் மற்ற இருபெரும் தூண்கலாக விளங்குபவர்கள் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கேமராமேன் ரத்னவேல். அடியே கொல்லுதே, முன் தினம் பார்த்தேனே மற்றும் நெஞ்சுக்குள் பெய்திடும் பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் பரவசம். BGM என்று சொல்லப்படுகிற பின் இசை சேர்ப்பிலும் ஹாரிஸ் ஜெயராஜ் முத்திரை பதிக்கிறார். ரத்னவேலின் கேமராவில் சென்னை முதல் சான் ஃப்ரன்ஸிஸ்கோ வரை அத்தனையும் அழகு. சிறந்த பாடல் வரிகளுக்காக மட்டுமின்றி தமிழ் பாடல்களை தமிழில் எழுதியதற்காகவும் தாமரை பாராட்டுக்குரியவர்.

குத்து பாடல்கள், கமர்சியல் ஃபார்முலா என்கிற வட்டத்திற்கு அப்பால், தந்தை மகன் உறவை பற்றி, அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை எதார்த்தமாக வெள்ளித்திரையில் பதிவு செய்ததற்காக கெளதம் மேனன் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர். சின்ன சின்ன சுவாரஸ்யமான வாழ்க்கை சம்பவங்களை ரசிக்கும் படியாக கொடுத்திருக்கும் கெளதம் மேனன் அதை அழகாக தொடுத்திருந்தால் தமிழ் சினிமா வரலாற்றில் பொறிக்கபட்டிருக்கும் வாரணம் ஆயிரம்.

- சகா. சதிஷ்.